நெற்றிக்காசு:-
எனக்கும் முன்
சென்று சொர்க்கம்
சேர்ந்துவிட்டிருந்தன
எனது கல்லறை
மீது இறைக்கப்பட்ட
பூக்கள்...
தோள் வலிக்க
சுமந்திருந்த பாரங்களை
வழி நெடுக
ஒவ்வொன்றாய்
தளர்த்தி விட்டு
இம்மையின் எல்லையைச்
சென்றடைந்தேன்....
மறுமைக்குக் கொண்டு
செல்லும் படகோட்டி,
கைத்தாங்கலாய் என்னை
உள்ளிழுக்க,
அசைந்தாடும் அப்படகின்
மீதெங்கும்
கல்லறை பூக்களின்
வாடை கப்பிக்கிடக்கிறது....
"நானும் சொர்க்கம்
சென்று சேர்வேனா?"
எனது கேள்வியை
பொருட்படுத்தாது அப்படகோட்டி
துடுப்பை பலமாக
போட்டு,
அசுரத்தனமாக படகை
வலித்துக் கொண்டிருந்தான்....
பின்னர்,
வழிச் செலவிற்கென
உற்றார் கொடுத்த
ஒற்றை நாணயத்தை
சுண்டி விட்டு
பூவா தலையா
போட்டுப் பார்த்து
அக்கேள்விக்குப்
பதிலை நானே
தேடிக்கொண்டேன்....
----------Jinovy
Comments
Post a Comment