சபிக்கப்பட்ட கடவுள் :-
இரு மனித ஆணவங்களின் சமரினால் உயரப் பறந்த படி தன் இருப்பின் அர்த்தத்தில் திளைத்துக் கொண்டிருந்த ஒரு பட்டம் அறுக்கப்பட்டது.... கடற் காற்றின் வேகத்தால் அலைக்கழிக்கப்பட்டு இங்குமங்குமாக வானில் தள்ளாடிக் கொண்டே பார்வையிலிருந்து விலகிச் செல்கிறது.... என்னைப் பொறுத்தவரை அறுத்துவிடப்பட்ட பட்டம் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் பறவைக்குச் சமம்.. முரண் நிலையாயினும் பொருள் ஒன்றுதான்.. பரிதாபமானது.... அகன்று செல்லும் அந்தப் பட்டம் என்னுள்ளிருக்கும் ஆகாயத்தை உணர்த்திச் செல்கிறதோ என்னவோ?! கடற்கரையை நிறைத்திருக்கும் இந்த மனித தொகுப்பினுள் நான் ஒரு தொடர்பற்ற அலகாகவே உணர்கிறேன்.... ஒருக்கால் அந்தப் பட்டம் எனது எண்ணங்களைக் கூட குறிக்கலாம்.. பிடியில்லாது பறத்தல், நிலை குலைதல், தாழ்வது போல் தோன்றி மீண்டும் மேலேறிப் பறத்தல்.... இங்கிருக்கும் அனைவரும் எப்போதும் என்னிடம் பிரார்த்திக்கின்றனர், தங்களுக்கு தேவையானவற்றிற்காக.. சமயங்களில் பலர் ஏசுகின்றனர், தேவையானவை நிறைவேறாததிற்காக.. சிலர் என்னை உரிமை கொண்டாடியும், சிலர் நான் இல்லையென்று அறுதியிட்டும் கூச்சலிடுகின்றனர்.. என்னுள் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும...