நான் யார்? :-

இன்றைய தூரத்தை 
கடந்த பின்
களைத்துப் போய்
இரவின் போர்வைக்குள் 
நுழைந்து கொள்கிறேன்....

தீர்க்கவியலாத குழப்பங்களின்
அதிர்வெண்கள் 
பிரபஞ்சத்தின் அமைதிக்குள்
ஒருங்க ஆரம்பிக்கின்றன....

சூன்யமாய்ப் போன 
இந்த இரவு
என்னை பிரதியெடுத்து
வெளி எங்கும் நானாக 
தன்னை பிரதிபலிக்கிறது....

ஏதேனும் ஒரு கருந்துகளாய்,
கோளாய், நட்சத்திரமாய்,
தூசு மண்டலமாய்,
எல்லாவற்றினுள்ளும் நிரப்பப்படுகிறேன்....

பசி எடுக்கும் போதெல்லாம்
அவற்றின் கொஞ்சத்தை 
விழுங்கியும் கொள்கிறேன்....

பேரண்டம் மடிந்து
சுருங்கி கொஞ்சமாய் மாறி
என் வாய்க்குள்
தன்னை முழுவதுமாய்
திணித்துக்கொள்கிறது....

நான் என்னவாகிவிட்டேன்
எனத் தெரியவில்லை,
ஆனால் விழுங்கவியலாத 
இரு வார்த்தைகளை
இப்போது உச்சரித்து 
மட்டும் பார்க்கிறேன் 
"நான் யார்!?!"

----------------- Jinovy

Comments

Popular posts from this blog

இறுதிக் கடிதம்:-

சூதாடியின் வரம்:-

சங்கிலித் தொடர்:-